அறந்தாங்கி, மே 3 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலவச ஆம்புலன்ஸ் சேவை கல்லுபட்டரை கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. கிளை உறுப்பினர் கெளதம்பாண்டி அவருடைய சொந்த செலவில் கட்சி சார்பில் ஏழை, எளியவர்கள் பயன்படுத்தும் வகையில், இலவச ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தியுள்ளார். அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை துவங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில். கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் மட்டுமே செய்பவர்கள் அல்ல; பொது சேவை செய்யும் நோக்கம் உடையவர்கள் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. தமிழகத்திலேயே அறந்தாங்கி பகுதியில் ஆம்புலன்ஸ் சேவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக துவங்கப்பட்டது பாராட்டக்க கூடியது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார். அரசு தலைமை மருத்துவர் சேகர், சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, மாவட்டக் குழு தங்கராஜ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கர்ணா, சேக் ராவுத்தர், கல்யாணம், அன்பழகன், கணேசன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.