புதுக்கோட்டை, ஜூலை 22 -
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
வாலிபர் சங்கத்தின் திருவரங்குளம் ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்டத் தலைவர் எம்.மகாதீர் தலைமை வகித்தார். விழாவில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளான பழ.குமரேசன்-சரண்யா, எஸ்.செந்தில்குமார்-மாலதி, எஸ்.ஜனார்த்தனன்-ஷீபா, சாக்கியபிரபு-இந்துமதி, சி.அன்புமணவாளன்-சலோமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களைப் பாராட்டி தமுஎகச மாநில துணைத் தலைவர் நந்தலாலா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு.மதியழகன், தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம், செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், பொருளாளர் கி.ஜெயபாலன் உள்ளிட்டோர் பேசினர்.
பட்டிமன்றம்
பாராட்டு விழாவிற்குப் பின்னர் கவிஞர் நந்தலாலா தலைமையில் எஸ்.பி.பாஸ்கர், இரா.தனிக்கொடி, கிலோனா மணிமொழி, அன்னலெட்சுமி ஆகியோர் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. முன்னதாக மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.