மயிலாடுதுறை, டிச.29 - கல்வி பயில வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் முதியவர் ஒருவர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ளது கதிராமங்கலம் என்னும் கிராமம். தஞ்சை மாவட்ட எல்லையான அக்கிராமத்தை சேர்ந்த 82 வயது முதியவர் குருமூர்த்தி, பாலிடெக்னிக் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அரசு பணியில் இருக்கும்போதே 1964 முதல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதி நேர மற்றும் அஞ்சல் வழி பட்ட வகுப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளில் சேர்ந்து படித்து வருகிறார். ‘கற்றது கையளவு’ என்று கூறும் குருமூர்த்தி திருமணம் செய்துகொள்ளாமல் படிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தொடர்ந்து பயின்று கொண்டே வருகிறார். இதுவரை பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்டி என 24 பட்டங்களைப் பெற்றுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்ட படிப்புகளும் ஓய்வு பெற்றதற்கு பிறகு 12 பட்ட படிப்புகளும் படித்து முடித்துள்ளார். படிப்பதற்கு தான் செலவு செய்யும் தொகையை செலவாக நினைத்ததில்லை என்றும், தனது அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாக இந்தப் படிப்புகள் அமைந்துள்ளன என்றும் குருமூர்த்தி தெரிவிக்கிறார். 25-வது பட்டப்படிப்பாக எம்.ஏ போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பாடப்பிரிவை தேர்வு செய்து, செவ்வாயன்று திறக்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்து அதற்கான பாடப் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். 82 வயதில் 25-வது பட்ட படிப்பிற்கு விண்ணப்பம் செய்த குருமூர்த்திக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். நேரம் தவறாமை மற்றும் திட்டமிடல் ஆகியவை தனது படிப்புகளுக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக தெரிவிக்கும் குருமூர்த்தி, இளைய தலைமுறையினர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கி நேரத்தை வீணடிப்பதாகவும், வாழ்க்கையை அர்த்தத்துடன் வாழ வேண்டும். வாழ்க்கையை கடந்து செல்ல, எனக்கு இதுபோன்ற படிப்புகள் உதவி செய்ததாகவும் 22 வயது இளைஞரைப் போல் தெரிவிக்கிறார் உற்சாகத்துடன்.