திருச்சிராப்பள்ளி, டிச.30 - 86 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு முதல் 22 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பணி ஓய்வு, பணிக்காலத்தில் மரணமடைந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொதுமேலாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருச்சி மண்டல தலைவர் சேகர் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் செந்தமிழ்செல்வன், ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட தலைவர் சிராஜூதீன், ஓய்வு பெற்ற மின் ஊழியர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் பஷீர், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட 570 பேர் கைது செய்யப்பட்டனர்.