தென்காசி, பிப்.25- தென்காசி மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் ரயில்வே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பலியானார். கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புனலூர் வழியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் வந்தது. தமிழக- கேரளா எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை அருகே எஸ். வளைவு பகுதி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெரும் விபத்தை தடுத்த தம்பதியர் அப்போது பயங்கர சத்தத்தைக் கேட்டு எழுந்த, அருகில் வசிக்கும் சண்முகையா- குருந்தம்மாள் தம்பதியர் டார்ச் லைட்டுடன் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்த தண்டவாளத்தில் ரயில் வரும் என்பதை அறிந்திருந்த தம்பதியர் லாரியின் சிதைந்த பாகங்கள் ரயில் தண்டவாளத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.அந்த நேரத்தில் ரயில் வந்து கொண்டிருந்தது பின்னர் ரயில் வரும் திசையை நோக்கி தங்களால் இயன்றவரை ஓடியுள்ளனர். சிறிது நேரத்தில் அந்த பாதையில் (அதிகாலை 1.15 மணி) வந்த ரயிலை நோக்கி அந்த தம்பதியர் டார்ச் லைட் அடித்துள்ளனர். டார்ச் லைட்டின் வெளிச்சத்தை பார்த்த ஓட்டுநர் ஏதோ அசாம்பாவிதம் நிகழ்ந்துள்ளது என்பதையறிந்து ரயிலை நிறுத்திவிட்டார். அந்த ரயில் காலிப் பெட்டிகளுடன் வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும் விபத்தை தவிர்த்த சண்முகையா- குருந்தம்மாள் தம்பதியரை அனைவரும் பாராட்டினர். ஓட்டுநர் பலி விபத்தில் லாரி முழுவதும் முழுமையாக சேதம் அடைந்து, பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநரான முக்கூடல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவர் சம்பவ இடத்திலே பலியானார். லாரி கிளீனர் லாரியில் இருந்து குதித்து தப்பினார். பின்னர் அவர் புளியரை சோதனைச் சாவடிக்கு சென்று தகவல் தெரிவித்தார். புளியரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி ஓட்டுநரின் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மண் அள்ளும் கருவிகள் மூலம் ரயில் பாதையிலிருந்த லாரியின் சிதைந்த பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஞாயிறு காலை ஆறு மணியளவில் ரயில் போக்குவரத்து சீரடைந்தது. இந்த விபத்து காரணமாக சென்னை எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகச் சென்றது.