காவல்துறையினர் பாராட்டு தஞ்சாவூர், டிச.17 - சாப்பிட வந்தபோது தவற விட்ட 4 லட்சம் ரூபாய் மற்றும் அரை கிலோ வெள்ளி கட்டிகளை உரியவரிடம் ஒப்ப டைத்த உணவக உரிமையாளரை காவல் துறையினர் பாராட்டினர். தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் காசிநாதன். இவர் அப்பகுதியில் மாஸ்டர் மெஸ் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு சனிக் கிழமை சாப்பிட வந்த ஒருவர், தனது பையை உணவகத்தில் மறந்து வைத்து விட்டுச் சென்றார். சில மணி நேரம் கழித்து இதைப் பார்த்த காசிநாதன், பையை திறந்து பார்த்த போது, அதில் பணம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து காசிநாதன், அந்த பணம் மற்றும் வெள்ளி இருந்த பையை, மருத்துவக் கல்லூரி காவல்துறை ஆய்வாளர் நசீரிடம் ஒப்படைத்தார். மேலும், பணம் இருந்த பையில் ‘திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூரில் உள்ள ஜி.ஆர்.எம். நகைக்கடை’ என எழுதியிருந்தது. அந்த பையில் இருந்த போன் நம்பருக்கு காசி நாதன் தகவல் அளித்தார். பின்னர், இந்தப் பணத்தை தவற விட்டுச் சென்றது ஜி.ஆர்.எம். நகைக்கடை நடத்தி வரும் கணேஷ் என்பது தெரிய வந்தது. இவர், திருச்சிக்கு சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பும் போது, உணவகத்தில் சாப்பிடச் சென் றது தெரிய வந்தது. இதையடுத்து அன்றிரவு கணேஷ், தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்கு வந்தார். ஆய்வாளர் நசீர், உதவி ஆய்வாளர் சசிரேகா ஆகி யோர் முன்னிலையில், உணவக உரிமையாளர் காசிநாதன் 4 லட்சம் ரூபாய் மற்றும் அரை கிலோ வெள்ளிக் கட்டி களை, உரிமையாளர் கணேஷிடம் ஒப்ப டைத்தார். மனித நேயத்துடன், நேர்மையுட னும் செயல்பட்ட உணவக உரிமையா ளர் காசிநாதனை காவல்துறையினர் பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். மேலும், பணத்தைப் பெற்றுக் கொண்ட கணேஷ், காவல்துறையினருக்கும் காசிநாதனுக்கும் நன்றி தெரிவித்தார்.