பாபநாசம், மார்ச் 20 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த உத்தாணியில் சாலையோரம் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார் சங்கரன். இவர் இளநீரை சீவி, அதைப் பருக பிளாஸ்டிக் ஸ்ட்ரா தருவதில்லை. அதற்குப் பதிலாக பப்பாளி குச்சியைத் தருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பப்பாளி இளந்தண்டை வெட்டி ஸ்ட்ராவாக்கி விட்டேன். நான்கு வருடமாக பிளாஸ்டிக்கில் தயாரான ஸ்ட்ராவை பயன் படுத்தாமல், பப்பாளி இளந்தண்டை வெட்டி, சுத்தம் செய்து ஸ்ட்ராவாக பயன்படுத்துகிறேன். தென்னம் ஓலையிலும் ஸ்ட்ரா தயாரிப்பேன். அது கொஞ்சம் சிரமம். என்னிடம் இளநீர் குடிக்கும் வெளிநாட்டினர் இது என்ன என்று கேட்கின்றனர். நான் அதற்கு ‘பப்பாயா ஸ்டிக்’ என்பேன்” என்றார்.