districts

தமிழகத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிலக்கரி ஒதுக்கீடு செய்யவில்லை அமைச்சர் பெரியசாமி குற்றச்சாட்டு

திண்டுக்கல், ஏப்.17- ஒன்றிய அரசு தமிழ கத்திற்கு போதிய நிலக்கரி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால் அரசு மின்சார பிரச்சனையை எளிதாக சமாளித்து வருகிறது என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி திண்டுக்கல்லில் பேட்டியளித்தார். திமுக அரசு பதவியேற்று ஓராண்டிற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்  இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் ஏப்ரல் 16 அன்று காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 5,902 விவசாயிகள் இலவச மின்சாரம் பெற்று பயனடைந்துள்ளனர். பயனடைந்த விவசாயிகளிடம் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் கலந்துரையாட திண்டுக்கல், வத்தலகுண்டு, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், நிலக் கோட்டை, பழனி, தொப்பம்பட்டி உட்பட ஒன்பது ஊர்களில் உள்ள திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  திண்டுக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக உணவுத்துறை, அமைச்சர் சக்கரபாணி, தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் பழனி எம்எல்ஏ செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தி யாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பது எல்லா ருக்கும் தெரியும் ஒன்றிய அரசு தான் நிலக்கரி ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு நிலக்கரி ஒதுக்கீடு செய்து கொடுக்கவில்லை என்றாலும் தமிழக அரசு மிக திறமையாக பிரச்சனையை சமாளித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு என்ற பிரச்சனை இல்லை. முதல்வரும் சரி மின்சாரத்துறை அமைச்சரும் சரி மிகுந்த கவனம் எடுத்து மின் பகிர் மானத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை எல்லாம் எளிதாக சமாளித்து விவசாயிகளுக்கு மின்சாரத்தை வழங்குகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து  ஓராண்டு முடிவதற்குள் ஒரு இலட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்த வரைமின் இணைப்புக்காக காத்திருந்த ஏறத்தாழ 6000 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. 6 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் தான் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு வருடத்திற்கு உள்ளே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் பெற பல திட்டங்கள் உருவாக்கியுள்ளார் முதல்வர் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தனி நிதிநிலை அறிக்கை உருவாக்கி விவசாயிகள் மீது அக்கறை செலுத்தி வருகிறார் என்றார்.

;