திண்டுக்கல், ஆக. 29 - அருந்ததியர் மக்களுக்கான மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீடு வெற்றி விழா மாநாடு, திண்டுக்கல்லில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த சிறப்பு மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அருந்ததியர் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்று வெற்றி விழா உரையாற்றினர்.
பட்டியல் வகுப்பினருக்கு உள்ளேயே அழுத்தப்பட்ட பிரிவினராக இருக்கும் அருந்ததியர் மக்களுக்கு, உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட நெடிய போராட்டத்தை- அருந்ததியர் இயக்கங்களை ஒன்றுதிரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. அருந்ததியர் மக்களின் நியாயமான உள் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் என். வரதராஜன் மாநிலம் முழுவதும் கொண்டு சென்றார். ஆதரவைத் திரட்டினார். பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார்.
அதன் விளைவாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஆணையம் அமைத்து ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் கலைஞர், அந்த ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், 7 பிரிவுகளை உள்ளடக்கிய அருந்ததியர் மக்க ளுக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கி 2009-ஆம் ஆண்டு சட்டமியற்றினார். அதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த உள்ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், உள் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக அந்த வழக்கிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.
இந்நிலையில், அருந்ததியர்க்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று தலைமை நீதிபதி தலைமை யிலான 7 நீதிபதிகள் அமர்வு 6:1 என்ற பெரும்பான்மை அடிப்ப டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இது அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு கிடைத்த முழுமையான வெற்றியாக அமைந்தது. எனவே, இந்த தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடும் விதமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 29 வியாழக்கிழமையன்று திண்டுக்கல் ஆர்.எம். காலனியில்- தோழர் என். வரதராஜன் நினைவுத்திடலில் சிறப்பு மாநாடு நடைபெற்றது.
வாலி செட்டிபட்டி காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை கலை நிகழ்ச்சியுடன் துவங்கிய இம்மாநாட்டில், பல்லாயிரக்கணக் கானோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
மாநாட்டிற்கு சிபிஎம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பி. செல்வராஜ் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.டி. கலைச்செல்வன் வரவேற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே. பாலபாரதி, என். பாண்டி, செ.முத்துக்கண்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணைப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், ஆதித்தமிழர் பேரவையின் மாநிலத் தலைவர் இரா. அதியமான், ஆதித்தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் கு. ஜக்கையன், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநிலத் தலைவர் நாகை. திருவள்ளுவன், திராவிட தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் வெண்மணி, தமிழர் சமூக நீதிக் கழக தலைவர் சுரா. தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் யு.கே. சிவஞானம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் அ.ராதிகா, மாதர் சங்க மாநிலத் தலைவர் அ. ராதிகா, வழக்கறிஞர் உ. நிர்மலா ராணி, சிபிஎம் நகரச் செயலாளர் ஏ. அரபு முகமது உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆனைமலை ரெட் ஈகிள் கலைக்குழுவின் நிகழ்ச்சியும், ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த பாரதி கலைக் குழுவின் கலைநிகழ்ச்சிகளும், மாநா ட்டில் பங்கேற்றவர்களை வெகுவாக ஈர்த்தன.