திண்டுக்கல், டிச.2-
அண்ணாமலைக்கும் ஒட்டுமொத்த பாஜகவுக்கும் தான் மெச்சூரிட்டி இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலபாரதி கூறினார்.
திண்டுக்கல்லில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் அவ்வளவாக மெச்சூரிட்டி இல்லை என்று தூத்துக்குடியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உண்மையில் அவருக்கும், அவரது கட்சியான பாஜகவுக்கும் தான் மெச்சூரிட்டி இல்லை. ஒரு தனிநபர் லஞ்சம் பெற்றதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் தொழில் செய்பவர்களை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கிறார்கள் என்று கூறி அவர்களது நிறுவனங்களை சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
அமலாக்கத்துறையின் லட்சணம்
அமலாக்கத்துறையின் இது போன்ற நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பேராபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாகும். அமலாக்கத்துறை என்பது சுயேச்சையாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. ஒன்றிய அரசின் துறை. அந்த துறை எவ்வாறு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு அங்கித் திவாரியின் கைது உதாரணமாகும் என்றார்.
அவர் இவ்வாறு லஞ்சம் கேட்டு மிரட்டக்கூடிய அளவிற்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நிச்சயமாக தெரியப்படுத்தப்பட வேண்டும். ஒரு மருத்துவரிடம் இப்படி லஞ்சம் கேட்டு பெற்ற அமலாக்கத்துறை நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த விசயத்தில் தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை, காவல் துறை துணிச்சலாக செயல்பட்டுள்ளது என்பது பாராட்டுக்குரியது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியவர். அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் அமலாக்கத்துறை அச்சுறுத்தலை தொடர்ந்து கொடுத்துள்ளது. எனவே அவர் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற முறையிலே தனது புகாரை தெரிவித்து இருக்கிறார். இதனால் தான் இவ்வளவு பெரிய சம்பவம் பூதாகரமாக வெளிவந்துள்ளது.
அதனால் தான், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதை அரசியல்படுத்தாதீர்கள், இது எல்லாத் துறையிலும் நடப்பது தானே என்று பேசிக்கொண்டிருக்கிறார்.
அரசு துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றாலோ அல்லது அரசுத் துறையில் உள்ள மற்றவர்கள் லஞ்சம் பெற்றாலோ, அதை சரி செய்ய வேண்டிய துறை அமலாக்கத்துறை. அப்படிப்பட்ட இடத்தில் உள்ள அமலாக்கத்துறையே லஞ்ச ஊழலால் சீரழிந்து கிடக்கிறது என்பதைத்தான் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஆகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வாறு லஞ்சம் கேட்டு மிரட்டுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தேர்தல் நிதிக்காக அமலாக்கத்துறையை முடுக்கும் பாஜக
இது ஒரு சாதாரண விசயம், லஞ்சம் எங்கெல்லாம் இல்லை, இதை பெரிதுபடுத்தக்கூடாது என்று பொதுப்படையாக அண்ணாமலை பேசி வருகிறார். அவரது கருத்து அவருடைய பாஜக ஒன்றிய அரசையும், அந்த அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு மருத்துவரிடம் ரூ.3 கோடி வரை லஞ்சம் கேட்டு மிரட்டும் சம்பவத்தையும் நியாயப்படுத்தக் கூடிய நடவடிக்கையாகும்.
பாஜகவின் தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே பார்க்க முடிகிறது. ஏற்கனவே பாஜகவின் தொழில் கொள்கை, பொருளாதாரக் கொள்கைகளால் பல தொழில்கள் நலிவடைந்து உள்ளன.
சிறு, குறு தொழில் செய்யும் அனைவரையும் ஒன்றிய பாஜக அரசு மிரட்டுகிறது. அண்ணாமலையின் நடைபயணத்திற்கு நாங்கள் ஒரு கோடி கொடுத்தோம், 2 கோடி கொடுத்தோம் என்று பலர் பொது வெளியில் பேசி வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த தொழிலதிபர்களிடம் தேர்தலுக்கான நிதியை மிரட்டி வாங்குவதற்குத் தான் இந்த அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த பாஜக அரசியலைத்தான் பெரிதுபடுத்தாதீர்கள் என்று அண்ணாமலை சொல்கிறார்.
துணை ராணுவப் படையை அனுப்பியது யார்?
இந்த பிரச்சனையில் அங்கித் திவாரிக்கு மேல் உள்ள மேலதிகாரிகள் யாரெல்லாம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை வெளிக்கொணர தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
மேலும் மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட இருந்த நிலையில், அங்கு யார் மத்திய பாதுகாப்புப் படை, துணை ராணுவத்தை அனுப்பி வைத்தது. மாநில லஞ்ச ஒழிப்பு காவல் துறையையே அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். ஒன்றிய அரசு அதிகாரத்தை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்கிறது என்பதைத் தான் இது காட்டுகிறது.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் நான் லஞ்சம் கேட்டு பேசுவதாகத்தான் அங்கித் திவாரி பேசியிருக்கிறார். இதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.
பேட்டியின் போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.