districts

விதிமுறைகளை பின்பற்றியே ஜல்லிக்கட்டு

தருமபுரி, மார்ச் 1-
அரசு விதிமுறைகளை பின்பற்றியே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

தருமபுரி மாவட்டம், சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக நடத்திடுவது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் வருவாய்த்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், வருவாய் கோட்டாட்சியர் ரா.காயத்ரி மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.