தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டாஸ்மாக் பாரில் தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் செவ்வாய்க்கிழமை நான்கு மணி நேரம் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் கீழஅலங்கத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் கடந்த 21-ஆம் தேதி காலை 11 மணிக்கு, கீழவாசலைச் சேர்ந்த மீன் வியாபாரி குப்புசாமி (68), கார் டிரைவர் விவேக் (36) ஆகியோர் சயனைடு கலந்து மதுவை குடித்ததால் சிறிது நேரத்தில் இறந்தனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்தும், மேலும் 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் வட்டாட்சியர் தங்கபிரபாகரன் முன்னிலையில், மண்டல தடய அறிவியல் துறை துணை இயக்குநர் ஜெயா தலைமையில், உதவி இயக்குநர் காயத்ரி, நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர், கீழஅலங்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையை திறந்து அதன் மற்றொரு வாசல் வழியாக பாருக்கு சென்றனர்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கைரேகை நிபுணர்களும் வந்தனர். காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை பாரில் உள்ள பொருட்களின் தடயங்கள், கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள மீன் மார்க்கெட்டில் இறந்து போன விவேக்கின் சகோதரர் கடையான வினோத் கடைக்கு சென்று அங்கு ஏதாவது தடயங்கள் உள்ளதா எனவும், அங்கிருந்த சக மீன் வியாபாரிகளிடம் விவேக் மற்றும் குப்புசாமி குறித்து விசாரித்தனர்.