districts

திருவாரூர் - காரைக்குடி வழியாக சென்னை செல்லும் கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்

தஞ்சாவூர், செப்.13 - திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில் மீண்டும் கம்பன் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது:  “திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகும், முன்பு மீட்டர்கேஜ் பாதையில் சென்னையில் இருந்து திருவாரூர் வழியாக காரைக்குடி வரை இயங்கி வந்த கம்பன் விரைவு ரயில் இத்தடத்தில் தற்போது மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே, நிறுத்தப்பட்டுள்ள கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இத்தடத்தில் இயக்க வேண்டும் என காரைக்குடி மற்றும் இத்தடத்தில் உள்ள பொதுமக்களிடம் இருந்து எனக்கு தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் வந்து கொண்டுள்ளன. காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பயணிகளின் இந்த நீண்ட கால கோரிக்கை ரயில்வே துறையால் புறக்கணிக்கப்பட்டும், அலட்சியப்படுத்தப்பட்டும் வருவதாக தெரிகிறது. தற்போது இந்த தடத்தில் மூன்று வாராந்திர சிறப்பு விரைவு ரயில் மட்டுமே இயக்கப்படுவதாகவும், நிரந்தர ரயில்கள் ஏதும் இயக்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே உடனடியாக கம்பன் விரைவு ரயிலை திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில் மீண்டும் இயக்கிட வேண்டும்.”  இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இக்கடிதத்திற்கு தென்னக ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “இந்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக” தெரிவித்துள்ளார்.

;