தஞ்சாவூர், பிப்.24- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதனன்று மொழியியல் துறையின் சார்பில் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளை கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் (வ.ஐ.சு) எனும் மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும், இன்று அவருடைய மூச்சுக் காற்று இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. கருத்தரங்கின் உயரிய நோக்கம் என்பது பல்வேறு அறிஞர்களை வரவழைத்து அவர்களின் முகம் பார்ப்பது, அவர்களுடைய செயலாற்றலைப் பார்ப்பது, அவர்களுடைய உள்ளார்ந்த அறிவை உள்வாங்கிக்கொள்வது, இனி வருங்காலங்களில் கருத்தரங்கில் நடைபெறும் அனைத்து பொழிவுரைகளும் விரைவில் நூலாக வெளியிடப்படும்’’ என்றார். முன்னதாக துறைத்தலைவர் முனைவர் ப.மங்கையற்கரசி வரவேற்றார். பதிவாளர்(பொ) க.சங்கர், மொழிப்புல முதன்மையர், முனைவர் இரா.காமராசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய மேனாள் இயக்குநர் பேராசிரியர் நீ.இராஜசேகரன் நாயர், பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறை மேனாள் துறைத்தலைவர் பேராசிரியர் த.முத்துக்கிருஷணன் ஆகியோர் கருத்துரையாற்றினர். உதவிப் பேராசிரியர் கி.பெருமாள் தொகுப்புரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் முனைவர் மா.இரமேஷ்குமார் நன்றி கூறினார்.