districts

img

தமிழ்ப் பல்கலை.யில் நரம்பு மொழியியல் சிறப்பு ஆய்வரங்கம்

தஞ்சாவூர், ஆக.24-  தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையின் சார்பில் சிறப்பு ஆய்வரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு ஆய்வுரை வழங்கிய, பல்கலைக்கழக துணைவேந்தரும், மொழியியல் பேராசிரியருமான முனைவர் வி.திருவள்ளுவன் பேசியதாவது:  

மனிதன் தன் உணர்வுகளைத் தொடர்புபடுத்த உதவும் மொழிக்கூறுகள், நரம்பு மண்டலம் மற்றும் மூளை ஆகியவற்றின் கூட்டிணைவில் செயலாற்றும் இயக்கம். மனித மூளையானது பில்லியன் கணக்கான நியூரான்களின் துணையுடன் இயங்குகிறது. நாள்தோறும் மனிதமூளை புதிய நியூரான்களை உருவாக்குகிறது.

அதில், மனித உடலின் செயலாக்கத்திற்கு 12 நரம்புகள் மிக முக்கியத் துணையாக நின்று உதவுகின்றன. மனிதர்களின் மழலைப் பருவத்தில் ஏற்படும் மொழி வெளிப்பாட்டுக் குறைபாடுகள், வயதான காலத்தில் ஏற்படும் நினைவு மறப்பு போன்ற மொழி தொடர்பான குறைபாடுகளுக்கும், மூளைக்கும் இடையில் நரம்பு மண்டலச் செயல்பாடுகள் ஊடாடி நிற்கின்றன. மொத்தத்தில் மனித மூளையின் நடவடிக்கைகளை நிர்ணயிக்கும் பெருமண்டலமாக நரம்பியல் விளங்குகிறது.

இதையே “நரம்பு மொழியியல்” (Neuro Linguistics) என்று மொழியியல் துறை தனியே ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நரம்பு மொழியியல் என்னும் தலைப்பில் 25 ஆண்டுகளுக்கு முன், தமிழ் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் மேற்கொண்ட முதல் ஆய்வாளர் பேரா.வி.திருவள்ளுவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன், கலைப்புல முதன்மையர் பெ.இளையாபிள்ளை, மூத்த மொழியியல் பேராசிரியர் நடராசப்பிள்ளை உள்ளிட்ட கல்வி இயலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.