தஞ்சாவூர், டிச.5- தஞ்சாவூர் அருகேயுள்ள சாலியமங்கலம் நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக புகார் கொடுக்காதவர்கள் முன் வரலாம் என பொருளாதாரக் குற்றப் பிரிவினர் அறிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலத்தில் ராமஜெயம் அன் கோ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த பழ.தேவேந்திரன் மற்றும் அவரது தந்தை பழனியப்பன் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்த தொகையைத் திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டனர். இது தொடர்பாக சாலியமங்கலத்தைச் சேர்ந்த ஆர்.ராஜாராமன் கொடுத்த புகாரின் பேரில், தஞ்சாவூர் மாவட்டக் குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது தஞ்சாவூர் பொருளாதார குற்றப் பிரிவில் புலன் விசாரணை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் நிலையில் உள்ளது. எனவே, இதுவரை புகார் கொடுக்காதவர்கள் அசல் ஆவணங்களுடன் தஞ்சாவூர் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் கொடுக்கலாம் என பொருளாதாரக் குற்றப் பிரிவின் தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் சுதா தெரிவித்துள்ளார்.