districts

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தஞ்சாவூர், ஜூலை 15- பேராவூரணி அருகே திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48). இவர் திமுக கிளைச் செயலாளராகவும், அரசு ஒப்பந்தக்காரராகவும் உள்ளார். இவருக்கு இலக்கியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வலப்பிரம்மன் காடு கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். ராதாகிருஷ்ணனின் தாயார் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி அறையில் தங்கி இருந்தார். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் பிராந்தி பாட்டிலில் பெட்ரோல் குண்டு தயார் செய்து வீட்டின் பால்கனியில் வீசி உள்ளனர். இதனால் பால்கனி மற்றும் ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்தன. நல்வாய்ப்பாக, தீ விபத்து போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை.

தஞ்சை எஸ்.பி நேரில் பார்வை

இந்த சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணன் திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் சேரன் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களையும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெறுவதற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.