districts

img

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை மனு

நிரந்தர பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்துவதை கைவிட வேண்டும். நீண்டகாலமாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் மருத்துவ காப்பீடு(இஎஸ்ஐ), தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) ஆகியவற்றிற்கான ரசீது மாதாமாதம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு அட்டை, அடையாள அட்டை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். 

தொழிலாளர்களுக்கு இரண்டு மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஊதியத்தை மாதத்தின் முதல் வாரத்திலேயே வழங்க வேண்டும். வார விடுமுறை, பண்டிகைக் கால அரசு விடுமுறை ஆகியவற்றை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக வழங்க வேண்டும். 

தமிழக அரசு முன் களப் பணியாளர்களுக்கு அறிவித்துள்ள ஊக்கத்தொகை ரூ 15 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும்

துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்கள் (சிஐடியு) சார்பில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கும் இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

தஞ்சாவூர் மாநகராட்சியில், மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை நேரில் சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், சிபிஎம் மாநகரச் செயலாளர் வடிவேலன் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.