கும்பகோணம், அக்.28- கும்பகோணம் ஒன்றியத்திற்குட்பட்ட 47 கிராம ஊராட்சிகளில் ரூ.2.26 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் செய்வதென கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் காயத்ரி அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் முத்துச்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கர் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சி புதிய ஆதிதிராவிடர் காலனி தெருவில் உள்ள சமுதாய கூடத்திற்கு சுற்றுச்சுவர், பேவர்பிளாக் தரை தளம் ரூ.38.29 லட்சத்தில் செய்வது. நீலத்தநல்லூர் ஊராட்சி சமையற்கூடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொகுதிக்குட்பட்ட 13 ஊராட்சிகளில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து, பயன்பாட்டில் இல்லாத 21 கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளன. இவற்றை இடித்து அப்புறப்படுத்துவது. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டு வரும் 15வது நிதிக்குழு மானிய நிதியில் ஊராட்சிகளில் குடிநீர் மற்றும் சுகாதார பணிகள் திருந்திய மதிப்பீட்டு அறிக்கையின்படி ரூ.47.93 லட்சத்தில் செய்வது. மேலும் 27 ஊராட்சிகளில் பொது கழிவறை, சாக்கடை, வடிகால் அமைக்கும் பணிகள் தலா ரூ.1.85 லட்சம் வீதம் ரூ.49.95 லட்சத்தில் மேற்கொள்வது.
கீழப்பழையார் ஊராட்சியில் 2 வகுப்பறைகளுடன் தொடக்கப் பள்ளி புனரமைப்பு கீழத்தெருவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மின் மோட்டாருடன் கூடிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், கீழத்தெருவில் 137 மீ சாலை பணிகள் மேற்கொள்வது, தார்ச் சாலையாக மேம்பாடு செய்யும் பணிகளை ரூ.34.2 லட்சத்தில் மேற்கொள்வது. நாகக்குடி ஊராட்சியில் இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கட்டிடம் பழுதடைந்துள்ளதால் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 95 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது இப்பள்ளி கிராம ஊராட்சி சேவை மையத்தில் இயங்கி வருகிறது. எனவே மாணவர்கள் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடம் ரூ.22,22 லட்சத்தில் கட்டுவது. பெருமாண்டி, சேஷம்பாடி, சாக்கோட்டை, சுந்தரபெருமாள்கோயில், அசூர் ஆகிய 5 ஊராட்சிகளில் ரூ.33.29 லட்சத்தில் தார்ச்சாலை, பைப் லயன் சுற்றுச்சுவர் உயர்த்தும் பணிகள் உட்பட 47 ஊராட்சிகளிலும் ரூ.2.26 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் செய்வதென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.