பேராவூரணி, டிச.29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த மணக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ். இவரது மனைவி நீவிதா (23). இவர் இரண்டாவது குழந்தை பேறு அறுவை சிகிச்சைக்காக கடந்த 24-ஆம் தேதி அன்று பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 26-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும் குழந்தையும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். அப்போது நீவிதாவுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்ட போது திடீரென வலிப்பும், அதனைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் இல்லை என உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் உறவினர்கள் அழைத்த பிறகு மருத்துவர்கள் வந்து, நீவிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். நிலைமை மோசமாகவே ஆக்சிஜன் பொருத்தி, மருத்துவமனை பின்வாசல் வழியாக ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது நீவிதா சுயநினைவு இல்லாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 28ஆம் தேதி இரவு 10 மணி நீவிதா தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே நீவிதா இறந்ததாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து, அவரது சகோதரர் நவீன் குமார் பேராவூரணி காவல் நிலையத்தில், மருத்துவர்கள் மீது புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, வியாழனன்று பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே, இறந்து போன நீவிதாவின் உறவினர்கள் கைக்குழந்தையுடன் வந்து 100 பெண்கள் உள்ளிட்ட, 250க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.