districts

ரயில் முன் பாய்ந்த தாய், ஆண் குழந்தை பலி: பெண் குழந்தை மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூர், மார்ச் 21 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்ததில் பெண், ஒரு குழந்தை உயிரிழந்தனர். மற்றொரு குழந்தை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறது.  திங்கள்கிழமை காலை திருவாரூரிலிருந்து காலை 8.25 மணிக்கு, பாசஞ்சர் ரயில் எண் 06197 காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது காலை 10.45-க்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை தாண்டி, பேராவூரணி நோக்கி சென்று கொண்டிருந்த போது, சிவக்கொல்லை என்ற இடத்தில் ஒரு பெண், தன் இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்தார். இதையடுத்து ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்.  இதில், ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு, ரயிலில் ஏற்றி பேராவூரணி ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் அந்தப் பெண் உயிரிழந்தார். பெண் குழந்தைக்கு பேராவூரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ரயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்த பெண்ணின் பெயர் மகேஸ்வரி (30), இறந்த ஆண் குழந்தையின் பெயர் தர்ஷன் (2), சிகிச்சை பெற்று வரும் பெண் குழந்தை பெயர் சமயாஸ்ரீ (6) என்பது தெரிய வந்தது.  மகேஸ்வரியின் கணவர் முருகானந்தம் (45), பட்டுக்கோட்டை நகராட்சி லட்சத்தோப்பு தெற்கு, பகுதியில் வசித்து வருவதும், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நெல் குடோனில் தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்தப் பெண் எதற்காக ரயில் முன் பாய்ந்தார் என விசாரணை நடைபெற்று வருகிறது.