தஞ்சாவூர், ஜூன் 13 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து புனல்வாசல் வழியாக பட்டுக்கோட்டைக்கு புதிய நகரப் பேருந்து துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேராவூரணியிலிருந்து காலகம், ஒட்டங்காடு, புனல்வாசல் வழியாக நகரப் பேருந்து இயக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள், பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து, பேராவூரணி எம்.எல்.ஏ., என்.அசோக்குமார், போக்குவரத்து துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, பேராவூரணி அரசுப் போக்குவரத்து கழக கிளையிலிருந்து, ஏ 6 என்ற நகரப் பேருந்து துவக்க விழா நடைபெற்றது. பேராவூரணியில் இருந்து காலை 6, 8.45, 11.20, மாலை 2.10, 5.20 மணிக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து காலை 7.20, 10, மதியம் 12.30, 3.40, 6.30 மணிக்கும் தினசரி பேருந்து இயக்கப்பட உள்ளது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதிய பேருந்து நிலையத்தில் நடந்த பேருந்து துவக்க விழாவிற்கு எம்எல்ஏ என்.அசோக்குமார் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செந்தில்குமார், பேராவூரணி கிளை மேலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.