கும்பகோணம், ஜூன் 21 - கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருக்கும் இந்த இரு காவல் நிலையத்தையும் கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணம் அருகே சுவாமிமலையில் வழக்கறிஞர் சங்க உறுப்பினரான வழக்கறிஞர் சுந்தரை வெட்ட முயன்ற நபர் குறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்தும், ஒரு மோசடி புகார் குறித்து வழக்கறிஞர்கள் சங்க விசாரணைக்கு ஆஜராக மறுத்ததுடன், வழக்கறிஞர் சங்க தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்கள் பூம்பொழில், ராஜசேகர் ஆகியோர் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. எனவே இதனை கண்டித்தும் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.