districts

ஜன.9 தமிழ் சான்றோர் பற்றிய பேச்சு போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்

தஞ்சாவூர், டிச.23 -  தஞ்சை மாவட்டத்தில் உமறுப் புலவர், தாயுமானவர், க.நா.சுப்பிரமணியம் மற்றும் வெள்ளை வாரணனார் ஆகியோரின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 9-ஆம் தேதி பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.  போட்டிகளில் வெற்றி பெறும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். உமறுப்புலவர், தாயுமானவர், க.நா.சுப்பிரமணியம் மற்றும் வெள்ளை வாரணனார் ஆகியோரின் தமிழ்ப்பணி குறித்து தயார் செய்து வரவேண்டும். மேலும் குலுக்கல் முறையில் தலைப்புகள் வழங்கப்படும். அச்சீட்டில் வரும் தலைப்பில் மட்டுமே மாணவ, மாணவிகள் பேச அனுமதிக்கப்படுவர். போட்டிகள் தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 9 ஆம் தேதி நடக்கவுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அன்று காலை 9.30 மணிக்கு வருகையை உறுதி செய்தல் வேண்டும். மாணவ, மாணவிகள் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.