கும்பகோணம், பிப்.25 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள புகையிலை நிறுவனத்தில் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு மெல்லும் புகையிலைக்கு தடையை விதித்தது. இதனால் கடந்த 5 மாதமாக வேலை இல்லாமல் மாற்று வேலையும் கிடைக்காமல் புகையிலை தொழிலாளர்கள் மிகவும் அவதியுறுகின்றனர். இந்நிலையில் அண்டை மாநிலங்களில் மெல்லும் புகையிலைக்கு தடை இல்லாத போது தமிழகத்தில் மட்டும் மெல்லும் புகையிலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மெல்லும் புகையிலை மீதான தடையை நீக்கியோ அல்லது பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிடவும், வேலை இல்லாத காலத்தில் நிவாரணம் வழங்கிடவும் தமிழக அரசை வலியுறுத்தி கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மைதீன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன், மாதர் சங்க பொறுப்பாளர் எம்.அறிவுராணி, சிஐடியு மைதீன் புகையிலை தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் கணேசன், சண்முகம் செயலாளர் செந்தில், பொருளாளர் இளங்கோவன், கங்குலி மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பிறகு கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவை அளித்ததற்கு அரசிடம் கோரிக்கையை அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.