தஞ்சாவூர், நவ.14- இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் இதர பாதிப்புகளில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், பொருளாதார இழப்பிலிருந்து மீள பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வது இன்றியமையாததாகும். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ச.கலைச்செல்வன் கூறுகையில், “பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசு மானியத்துடன் ராபி 2022-23 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறு வட்டங்களில், அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் கடிதம் அளித்து கடன் பெறும் வங்கிகளின் மூலம் காப்பீடு செய்யலாம். இதர, பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். வாழை பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.70,100 என காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் 5 விழுக்காடு தொகையான ரூ.3,505 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்யலாம். மரவள்ளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20,350 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் 5 விழுக்காடு தொகையான ரூ.1,018 பிரீமியம் தொகை செலுத்தி மரவள்ளி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். மேலும் வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் 28.02.2023 ஆகும். விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா மற்றும் அடங்கல், விண்ணப்ப படிவம் அலைபேசி எண் ஆகியவற்றுடன் சென்று காப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.