தஞ்சாவூர், ஜூலை 20 - கனமழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகோணம் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும், கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரங்களான கிணறுகள் முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கி விட்டபடியால், ஜூலை 19 (செவ்வாய்க்கிழமை) முதல் அதனுடைய மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு உட்பட்ட சில கிராம குடியிருப்புகளுக்கும், திருவிடைமருதூர், ஆடுதுறை, சோழபுரம், திருப்புவனம் மற்றும் வேப்பத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வெள்ளப்பெருக்கு முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.