விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை 165 கி.மீ நீளமுள்ள இச்சாலையை 2006ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக என்.எச்.45சி என அறிவிக்கப்பட்டு 2010 ஆண்டில் திட்டம் தயார் செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ரூ.3517 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்து 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பணிகள் துவங்கப்பட்டது. 2020 க்குள் பணிகளை முடித்து 2021ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் பணிகளை முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. சாலையில் பலஇடங்களில் மழைநீர் வடிகால் மற்றும் ஆற்றுப் பாலங்கள், மேம்பாலங்களின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாலங்களுக்காக தோண்டப்பட்ட குழிகள், அரை குறையாக நிற்கும் கட்டுமான பணிகள், பால பணிகளில் நீட்டி நிற்கும் இரும்புக் கம்பிகள் சாலைக்கு இடையூறாகவும் விபத்துகளுக்கு காரணமாகவும் உள்ளது. சாலையில் ஒரு வழி போடப்பட்டு மறு வழி போடப்படாமல் பல்வேறு இடங்களில் வழி மாறி மாறிபயணிக்கும் நிலை மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இப்பணிகள் துவங்கப்பட்டு சுமார் 4 ஆண்டு காலத்தில் ஏராளமானோர் விபத்தில் உயிர் பலி ஆகியுள்ளனர். இப்பணிகளை விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை ரிலையன்ஸ் இன்பராஸ் டெக்சர் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து பல சப்-காண்ட்ரக்டர்களை பணிக்கு அமர்த்தியதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டு அவ்வப்போது நிறுத்தப்பட்டும் உள்ளது. சேத்தியாதோப்பு முதல் சோழபுரம் வரையிலும், சோழபுரம் முதல் தஞ்சாகூர் வரையிலும் என இரு பகுதிகளாக பட்டேல் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் பணிகளை தாமதிக்கிற போதும், சாலைக்கான இடங்களை பெற்று தருவதிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மிகுந்த அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளது. உரிய நேரத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்திருந்தால் சாலை பணிகளும் முடிவடைந்திருக்கும், விபத்தினால் உயிர் பலிகளையும் தடுத்திருக்க முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெய்வேலி பகுதி சார்பில் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பின்னர் பணிகளில் தொய்வு ஏற்பட்ட போது செப்டம்பரில் கையெழுத்து இயக்கத்தை துவக்கி 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்தது. சாலை பணிகள் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, காடாம்புலியூர், நெய்வேலி, வடலூர், சேத்தியாதோப்பு, சோழத்தரம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் பயணிப்பதால் அடிக்கடி பழுது ஏற்படுவதும், விபத்துக்கள் அதிகரிப்பது தொடர்கதையாகி உள்ளது.