தஞ்சாவூர், மார்ச் 21 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் நடைபெற்று வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தற்போது நகரங்களுக்கும் பெரிது படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் முதன்முறையாக பெருமகளூர் பேரூராட்சியில் இத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பெருமகளூர் பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் சுந்தரத்தமிழ் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செ.புனிதவதி வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு வேலை அடையாள அட்டையை வழங்கி வாழ்த்திப் பேசினார். இதில், 1,200 பயனாளிகளுக்கு வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து பெருமகளூர், சாஸ்திரி நகர், அய்யனார்கோவில் குளம் வடிகால் வாய்க்கால்களை ஆழப்படுத்தி, குளத்தை தூர்வாரும் பணி, ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. பெருமகளூர் பேரூராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.