districts

தென்னையை தாக்கும் காண்டமிருக வண்டுகள் கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண்துறை விளக்கம்

தஞ்சாவூர், செப்.13-  கற்பக விருட்சமாம் தென்னை, சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் ஏறத்தாழ 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னையில் காண்டாமிருக வண்டின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும், ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக காணப்படுகிறது. தாக்குதலின் அறிகுறிகள்  காண்டமிருக வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்து பாகத்தில் துளையிட்டு மரத்தின் உள்ளே சென்று மொட்டு பகுதியை மென்று விடுகிறது. தாக்கப்பட்ட பாகம் போக எஞ்சிய குறுத்து விரியும் போது தென்னை மட்டை முக்கோண வடிவில், சீராக கத்தரியால் வெட்டியது போல் தோற்றமளிக்கும். காண்டமிருக வண்டு தாக்குதலினால் 10 முதல் 15 விழுக்காடு மகசூல் குறையும்.  தாக்கப்பட்ட மடிந்து போன மரங்களை தோப்புகளிலிருந்து அகற்றி அழித்து விட வேண்டும். குப்பை மற்றும் எருக்குழிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எருக்குழிகளில் உள்ள முட்டை, புழுக்குள், கூட்டுப் புழுக்களை பொறுக்கி அழிக்க வேண்டும். மெட்டாரைசியம் அனிசோபிலே பச்சைமஸ்கார்டைன் பூஞ்சை 250 மில்லியுடன் 750 மில்லி நீர் சேர்த்து எருக்குழிகளில் தெளிப்பதன் மூலம் வண்டுகள் மற்றும் இளம் புழுக்களை அழிக்கலாம். அந்தி நேரங்களில் விளக்குப் பொறிகளை வைத்து காண்டமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.இளம் தென்னங்கன்றுகளுக்கு வேப்பங்கொட்டை தூளையும், மணலையும் 1:2 விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் நடுக்குறுத்தின் மூன்று மட்டை இடுக்குகளில் வைக்கலாம். இளம் தென்னங்கன்றுகளுக்கு நாப்தலீன் உருண்டை 3 வீதம் பொடி செய்து மட்டை இடுக்குகளில் இடலாம். ஒரு மண் பானையில் 5 லிட்டர் நீருடன் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை வைத்து காண்டமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். ரைனோலூர் இனக்கவர்ச்சி பொறியினை ஹெக்டேருக்கு 5 என்ற விகிதத்தில் வைத்து காண்டமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். 5 கிராம் போரேட் மருந்தினை துளையுடன் கூடிய பொட்டலமாக எடுத்து 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு இரண்டு முறை வைக்கலாம் என சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சாந்தி தெரிவித்துள்ளார். 

;