தஞ்சாவூர், மார்ச்.25- பேராவூரணியில் குண்டுங்குழியுமாக ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி மூன்று புறமும் காட்டாறுகளால் சூழப்பட்டுள்ளது. அறந்தாங்கி சாலையில் சித்தாதிக்காடு தரைப்பாலம், சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை செல்லும் பூக்கொல்லை காட்டாற்று பாலம், பட்டுக்கோட்டை சாலையில், செல்வவிநாயகபுரம் காட்டாற்று பாலம் என மூன்று மார்க்கத்திலும் காட்டாறுகள் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே பெரு மழைக்காலங்களில் மூன்று புறமும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, புதுக்கோட்டை சாலை வழியாகவே நகருக்குள் வரவோ, வெளியேறவோ முடியும். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பெருமழையால் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செல்வவிநாயகபுரம் காட்டாற்று பாலத்தில் உயரத்தை கடந்து, முழங்கால் அளவு தண்ணீர் ஓடியது. மேலும், பாலத்தின் ஒருபகுதியில் வெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதிய பாலம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அதிகாரிகள் உறுதியளித்தனர். அதே நேரத்தில் சுமார் 100 மீட்டர் நீளம் உள்ள இப்பாலத்தில், அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை பல இடங்களில் குண்டுங்குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே, தற்காலிக ஏற்பாடாக பாலத்தில் உள்ள தார்ச்சாலையை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர் ஆறு.நீலகண்டன், மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.