districts

நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் வேளாண் துறை விளக்கம்

தஞ்சாவூர், ஜன.6- நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ஜி.சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் ஏறத்தாழ 5,400 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நிலவும் அதிக பனிபொழிவால், நெற்பயிரை தாக்கும் குலை நோயால் விளைச்சல் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.  பயிரின் அனைத்து பகுதிகளும் (இலை, தண்டு, கணுப்பகுதி, கழுத்துப்பகுதி, கதிர்) பூசணத்தால் தாக்கப்பட்டிருப்பது இந்த நோய் தாக்குதலை கண்டுபிடிக்கும் ஒரு வழிமுறை. அதுமட்டுமல்லாமல் இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மையப் பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவப்புள்ளிகள் காணப்படும்.  இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சதவீதக் கரைசல் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் நடவு நட்ட 45 நாட்கள் கழித்து நோய்களின் தீவிரத்தை பொருத்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனுடன் ஒரு லிட்டர் புளித்த தயிரை கலந்து தெளித்தால் செயல்திறன் இன்னும் அதிகரிக்கும். இந்த நோய் தாக்குதல் தீவிரமாக இருந்தால் ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 விழுக்காடு, டபிள்யுபி (WB) 200 கிராம் அல்லது கார்பன்டாசிம் 50 விழுக்காடு, டபிள்யுபி (WB) 200 கிராம் அல்லது அசாக்சிஸ்டோர்பின் 25 விழுக்காடு, எஸ்டி (ST) 200 மி.லி, அல்லது ஐசோபுரத்தியோலேன் 40 விழுக்காடு, இசி (EC) 300 மி.லி ஆகிய மருந்துகளில் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.