தஞ்சாவூர், பிப்.24- தஞ்சாவூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபய துல்லா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இரு நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து மேயர் சண்.ராமநாதன் இரு தீர்மானங்களை கொண்டு வந்து பேசும்போது, ‘‘திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில், திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் மற்றும் திருச்சி- ஹவுரா (வாரம் இருமுறை இயக்கப்படும்) விரைவு ரயிலை தஞ்சாவூர் வரை நீட்டிப்பு செய்து தர வேண்டும். மதுரை-காசி விரைவு ரயிலை தஞ்சாவூர் வழியாக இயக்க வேண்டும். தஞ்சாவூர்-சென்னை இடையே பகலில் விரைவு ரயில் இயக்க வேண்டும். ரயில் சேவை நீட்டிப்பு, புதிய ரயில் சேவை மற்றும் தஞ்சாவூர்-அரியலூர் இடையே ரயில் பாதை அமைப்பது ஆகிய பணிகள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் உதவியுடன் தேவையான நிதியை பெற்று நிறைவேற்ற ரயில்வே துறையை கேட்டு கொள்கிறோம். தஞ்சாவூர் பெரியகோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், வாகன நிறுத்தவும் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான 19 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு நிலத்தை கட்டாய நில எடுப்பு மூலம் கையகப்படுத்தப்படும். அதற்கு உண்டான செலவின தொகையை மாநகராட்சி ஏற்கும்’’ என்றார்.