சேலத்தில் ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை வைக்க முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் செவ்வாய் பேட்டையில் உள்ள ரேஷன் கடைக்குள் சென்று பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க பாஜகவினர் முயன்றுள்ளனர். இதையறிந்த காவல்துறையினர், ரேஷன் கடையின் முன்பு பாதுகாப்பில் ஈடுபட்டு அனுமதிக்கு மறுத்துள்ளனர். இதனால் பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து ரேஷன் கடை பெண் பணியாளரை மிரட்டி ரேஷன் கடையின் இருப்பு பட்டியல் கொண்ட பலகையில், மோடி குறித்த தகவலும் ஒன்றிய அரசின் தகவலும் எழுதிட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். மேலும் பாஜகவினர் பிரதமரின் புகைப்படத்தை வைக்க அனுமதி தர வேண்டும். இல்லையெனில் வீடு, வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்க அனுமதி தரவேண்டும் என கேட்டனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததையடுத்து, பாஜகவினர் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து பாஜகவினரை கலைந்து போக சொல்லியும் போகாததால் அங்கிருந்த பாஜகவினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வரும் பாஜக, ரேஷன் கடையில் வந்து மோடி படம் வைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. மேலும் இதுபோன்ற அராஜக செயல்களை பாஜகவினர் கைவிட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.