விழுப்புரம், ஜூலை.15-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் கோட்டை மேட்டை சேர்ந்தவர் பாட்ஷா மகன் ஜாபர் அலி (வயது 19). இவர் திண்டிவனத்தில் உள்ள டிபன் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 9-ந்தேதி அந்த சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போனார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசாரிடம் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர்.
அப்போது திண்டிவனம் பகுதியில் சிறுமியுடன் சென்ற ஜாபர் அலியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை ஜாபர் அலி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை விழுப்புரம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.