districts

சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் மேம்பாலம் விரைவில் பணிகள் தொடக்கம்

சென்னை, டிச. 13- சென்னை மாநகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரூ.335 கோடி செலவில் 3 இடங்களில் மேம்பாலங்களை கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் தினமும் 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மாநகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரூ.335 கோடி செலவில் 3 இடங்களில் மேம்பாலங்களை கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வியாசர்பாடி கணேசபுரம், ஓட்டேரி, தி.நகர் உஸ்மான் சாலை ஆகிய 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதற்காக ரூ.335 கோடியை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மூலமாக பெற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கணேசபுரத்தில் ரூ.142 கோடி செலவில் 680 மீட்டர் நீளம் 15.20 மீட்டர் அகலத்துக்கு 4 வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படுகிறது. ஓட்டேரியில் ரூ.62 கோடி செலவில் 508 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்திற்கு 2 வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படுகிறது. தி.நகர் உஸ்மான் சாலையில் 1200 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்திற்கு 2 வழிச்சாலை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 3 இடங்களிலும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்குகிறது.