districts

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,146 கன அடியாக அதிகரிப்பு

திருவள்ளுர்,ஜூன் 19-

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த கனமழையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு  சுமார் 11 செ.மீட்டர் மழை பெய்து உள்ளது.  

     இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. ஞாயிறு காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1146 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 19.17 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன்  கனஅடியில் தற்போது 2,403 மி. கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக பூண்டி  ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 225 கன அடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள பகுதிகளில் இருந்து தொடர்ந்து ஏரிக்கு  நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கும்போது உபரி நீர் திறப்பது வழக்கம். ஆனால் இப்போது ஏரியில் 19 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படாது.