திருவள்ளூர், ஜன. 16- சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டிஏரி. இந்த நீர் தேக்கம் 1944-ம் ஆண்டு கட்டப் பட்டது. ஏரி நிரம்பினால் அதில் இருந்து உபரி நீர்வெளி யேறும் வகையில் 800 அடி நீளத்தில் மதகுகள் அமைக் கப்பட்டுள்ளது. இதில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்கள் உள்ளன. பூண்டி ஏரி கட்டப்பட்டதிலிருந்து இதுவரை ஷட்டர்கள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடியில் தற்போது 3085 மில்லியன் கன அடி (3 டி.எம்.சி) நீர் இருப்பு உள்ளது. தற்போது மழை இல்லாதததால் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உபரி நீர் செல்லும் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷட்டர்களில் இருந்து 30 கன அடி வரை வீணாக உபரி நீராக வெளியேறி வருகிறது. எனவே பொதுப் பணித்துறையினர் பூண்டி ஏரியில் உள்ள ஷட்டர்களில் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.