கிருஷ்ணகிரி,நவ.5- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலை செய்த ஊத்தங்கரை வட்டம், மத்தூர் ஒன்றியம் அந்தேரிபட்டி தொழிலாளர்களுக்கு நான்கு மாதங்கள் கடந்தும் இதுவரை கூலி வழங்கப்படாததற்கு விதொச கண்டனம் தெரிவித்துள்ளது. தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் இதில் பணி புரிந்த ஏழை எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள் குறைந்த பட்ச செலவினங்களுக்காக கூட என்ன செய்வது என்று தெரியாமல் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விசாரித்த போது ஒன்றிய அரசு இதற்கான நிதியை கடந்த ஓராண்டாக வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது என்று கூறப்படுகிறது. 100 நாள் வேலை கூலி பாக்கியியை வழங்குவதற்கு ஒன்றிய அரசு இதுவரை நிதி வழங்காததை கண்டித்தும், உடனடி யாக நிதியை ஒதுக்கி அனுப்பிட வேண்டு மென அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, தலைவர் பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக கூலி பாக்கியை வழங்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி வழங்கவில்லை என்றால் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.