districts

சென்னை முக்கிய செய்திகள்

வேட்டைக்காரன் மக்களுக்கு வழங்கப்பட்ட  பட்டாவை கணினியில் பதிவேற்றறம் செய்க

பி.டில்லிபாபு வலியுறுத்தல்

திருவள்ளூர், செப் 3- பன்னீர் வாக்கம் ஊராட்சியில் வாழும் வேட்டைக்காரன் இன மக்களுக்கு வழங்கிய வீட்டு மனை பட்டாவை கிராம பதிவேட்டில், வருவாய்த்துறையினர் கணினியில் பதிவேற்றும் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லி பாபு வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுணியம் ஊராட்சி, பன்னீர் வாக்கத்தில் வேட்டைக்காரன் இன  மக்களின் கோரிக்கை விளக்க கூட்டம் சனிக்கிழமையன்று (செப்-2), தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடை பெற்றது.  இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு பேசுகையில், பன்னீர் வாக்கம் கிராமத்தில் வேட்டைக்காரன் இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்க ளுக்கு பிறகு, இங்கு 50 பட்டாக்கள்  மட்டும் வழங்கியுள்ளனர்.  இந்த பட்டாக்களையும்  கடந்த 30 ஆண்டுகளாக கிராம பதிவேட்டில் வருவாய் துறையினர்  பதிவேற்றம் செய்யவில்லை இதனால் அம்மக்கள் இதுவரை தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட அரசின் எந்த சலுகைகளும் பெற முடியவில்லை. பட்டாக்கள் கிடைத்தும் பயனில்லாமல் உள்ளனர். உடனடியாக பட்டாக்களை கணினியில் பதிவேற்றும் செய்து  அரசின் உதவிகளை பெற்று தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விடுபட்டவர்களுக்கு பட்டாக்களை வழங்க வட்டாட்சியர் உரிய நடவடிக்கை வேண்டும்.சாலை,  குடிநீர் போன்ற பிரச்சனையை தீர்க்கவும்  உரிய கவனம் செலுத்த வேண்டும். மேலும் வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் (எஸ்.டி), பட்டியலில் சேர்க்க தமிழ்நாடு முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.  நிகழ்ச்சிக்கு  வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ராஜா தலைமை தாங்கினார். இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு,  வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை, மாநில நிர்வாகிகள் ரமேஷ், ஆறுமுகம் மாவட்ட தலைவர் டி.டில்லி, அகில இந்திய ஆதிவாசிகள் மேடை அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம், கிளை நிர்வாகிகள் சங்கர், குமார், பிரகாஷ் ஆகியோர் பேசினர். முன்னதாக சங்கத்தின் பெயர் பலகை, சங்க கொடி ஏற்றினர்.

கஞ்சா விற்பனை: குறும்பட இயக்குநர் கைது

பூந்தமல்லி,செப்.3-  குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.  அவர்கள் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆகாஷ்(24), சஞ்சீவ்(25), சஞ்சய்(24), என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஆகாஷ் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்ததும், சஞ்சய் குறும்படங்களை இயக்கியிருப்பதும் தெரிந்தது. நண்பர்களான 3 பேரும் கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அதிகம் பணம் சம்பாதிக்கும் ஆசை யில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள னர். அவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

துண்டிக்கப்பட்ட மனித கால் மீட்பு

சென்னை,செப்.3- சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மனித கால் கிடந்தது.  இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள் இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் காலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்த கால் யாருடையது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிக்காக யார்டுக்கு வந்தபோது இந்த கால் ரயிலில் அடிபட்டு தொங்கி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கூடுதல் பெட்டிகளுடன்  குருவாயூர் ரயில் இயக்கம்

சென்னை,செப்.3- தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-  சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில்  ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி, ஒரு பொது 2-ம் வகுப்பு பெட்டி ஆகியவை கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில் மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடைகளை உடைத்து கொள்ளை

தாம்பரம்,செப்.3- தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் பால் கடை நடத்தி வருபவர் ஜெயபிரகாஷ். சனிகிழமையன்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.  ஞாயிறன்று அதிகாலை கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது பணப்பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதேபால் அதேபகுதியில் உள்ள சந்திரசேகரன் என்பவரின் நாட்டு மருத்து கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரத்தை திருடியதுடன் அருகில் உள்ள செல்போன் கடையின் பூட்டையும் உடைத்தனர். அதில் இருந்த மேலும் சில பூட்டுக்களை உடைக்க முடியாததால் கொள்ளையர்களால் கடைக்குள் செல்ல முடியவில்லை. இதனால் கடையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பு உள்ள செல்போன்கள் தப்பியது.   கொள்ளையர்கள் கடைகளின் பூட்டை உடைக்கும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 3 பேர் பெரிய இரும்பு கம்பியால் ஷட்டரின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து பணம், பொருட்களை அள்ளி செல்கின்றனர். கண்காணிப்பு கேமரா வில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

எரிவாயு  சிலிண்டர் வெடிப்பு 

சென்னை,செப்.3- தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சமையல் எரிவாயு ஏஜென்சி உள்ளது.  இங்கிருந்து கொண்டு செல்லப்படும் கியாஸ் சிலிண்டர்கள் இரும்புலியூர், கங்கை தெருவில் அமைந்துள்ள தனியார் பள்ளி அருகே உள்ள காலி மைதானத்தில் இறக்கிவைத்து சிறிய வாகனங்களில் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். வழக்கம்போல் வாகனங்களில்  சிலிண்டர்களை ஏற்றி, இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்த்து. நல்வாய்ப்பாக  அருகில் வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் எதுவும் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

வரத்து அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி

சென்னை,செப்.3-  சென்னை கோயம்பேடு சந்தையில் ஞாயிறன்று  530-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது.  வரத்து அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை  வீழ்ச்சி அடைந்தது. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.5-க்கு விற்கப்பட்டது. இதேபோல் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட பச்சைகாய்கறிகளின் விலையும் சரிந்து உள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் வரத்து குறைவால் ரூ.200 வரை உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.  கடந்த சில நாட்களாக தினசரி 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வருவதால் தக்காளி விலை மேலும் சரிந்து ரூ.18-க்கு விற்பனை ஆனது. வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்கப்படுகிறது. வரத்து அதிகரிப்பு காரணமாக கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, சவ்சவ், நூக்கல், வெள்ளரிக்காய், முருங்கைக்காய் ஆகிய காய்கறிகள் விற்பனை ஆகாமல் அதிகளவில் மூட்டை மூட்டையாக தேக்கமடைந்தன. இதனால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாஞ்சா நூலுக்கு 60 நாட்கள் தடை நீட்டிப்பு

சென்னை,செப்.3- சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் தொடர்ச்சி யாக மனித உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் தயாரிக்க, பறக்க விட, விற்பனை செய்ய, சேமித்து வைக்க  காவல்துறை ஆணையர் தடை விதித்தார். தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து விற்ற வர்கள் கைது செய்யப் பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்  பட்டனர். இந்த நிலையில் மாஞ்சா நூல் பட்டம் மீதான தடையை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தர விட்டுள்ளார். மாஞ்சாவுக்கு சனிக்கிழமையன்று முதல் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை 60 நாட்கள் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

சென்னை மக்களை மிரட்டும் மர்மக் காய்ச்சல்

சென்னை,செப்.3- சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதால் மழைக் காலத்தில் பரவும் காய்ச்சல், வயிற்று போக்கு போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் காய்ச்சல் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு இருக்கிறது. விஷக்காய்ச்சலாக இருந்தால் கர்ப்பிணிகள், வய தானவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் ஆகியோரை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி விடும். ரத்த நாளங்கள் உள்பட உடலில் பல பாகங்களில் வீக்கத்தை உரு வாக்கும். இதனால் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே காய்ச்சல் கண்டவர்கள் உடனடியாக மருத்து வர்களை அணுகுவது நல்லது.  காய்ச்சல் கண்டவர்கள் இருமல், சளி, உடல் வலி ஆகியவற்றால் ஒருவாரத்துக்கும் மேலாக அவதிப்படுகிறார்கள். கொரோனா வுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதை போல் பருவகால காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ள ஆண்டுதோறும் பருவகாலம் தொடங்குவதற்கு முன்பே நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதிலும் வயதானவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சர்க்கரை நோயாளிகள் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது என்கிறார்கள்.  இந்த மாதிரி தடுப்பூசி போட்டுக் கொள்வ தால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமை யான ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என்கிறார்கள். இந்த மாதிரி தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 70 விழுக்காட்டினர் உயிர் ஆபத்துக்களில் இருந்து தப்புகிறார்கள்.  எனவே காய்ச்சல் வராமல் தடுக்கவும், பரவுவதை தவிர்க்கவும் கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்க வேண்டும், தெரு வோரங்களில்  உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  முகக்கவசம் அணிதல், கூட்டங்களை தவிர்த்தல் நல்லது, வீடுகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.  ஆண்டுதோறும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.  வய தானவர்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்து வர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெண்ணின் வயிற்றில் உருவான  5 கிலோ கட்டியை அகற்றம்

விழுப்புரம்,செப்.3- விழுப்புரம் மாவட்டம், முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 5  கிலோ எடையுள்ள கட்டியை மருத்துவர்கள் அகற்றினர். வேலூர் மாவட்டம், வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மொழிச்செல்வம், இவரது மனைவி பரிமளா(வயது 33). இவருக்கு கடந்த ஜூலை மாதம் கடுமை யான வயிற்று வலி ஏற்பட்டது. இதை யடுத்து அவர் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கர்ப்பப்பையில் 5 கிலோ எடையிலான கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தலைமையில் மகளிர் மற்றும் மகப்பேறு துறை தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் டாக்டர்கள் சங்கீதா, இளையராஜா, நித்திய பிரியதர்ஷினி, சிறுநீரகத்துறை நிபுணர்கள் அருணகிரி, பாஸ்கர், மயக்கவியல் நிபுணர் செந்தில்குமார், மகேந்திரன், திருச்செல்வம் ஆகியோர் கொண்ட  மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, கட்டியை அகற்றினர்.  இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி கூறுகையில், இது போன்ற அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆகவே ஏழை, எளிய மக்கள் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்  கேட்டுக்கொண்டார். அப்போது மருத்துவ துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, நிலைய மருத்துவ அலு வலர் ரவிக்குமார், உதவி நிலை மருத்துவ அலுவலர் நிஷாந்த், நிர்வாக அலு வலர் சக்திவேல் மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.

ஒருங்கிணைக்கப்பட்ட நன்கொடை,  சேவை தளம்  அறிமுகம்

சென்னை,செப்.3-  இந்தியா முழுவதும் உதவி தேவைப்படும் மக்களுக்கு முறையான வகையில் உதவி மற்றும் சேவைகளை வழங்க சிஐஜிஎஸ் டெக் இன்னொவேஷன் நிறுவனம் டிரஸ்டட் டொனேஷன் என்னும் இந்தியாவின் முதல் முழுமையான நன்கொடை, சேவை இணைதளத்தை துவக்கி உள்ளது. பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பாதுகாப்பான முறையில் நன்கொடை அளிக்கவும், சமூக தொண்டு நிறுவனங்களின் உண்மைத் தன்மையை அறிந்து அவர்களின் முழுமையான விவரங்களும் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. சமூக தொண்டு நிறுவனங்களின் விவரங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் 4 ஆயிரம் பயிற்சி பெற்ற பணியாளர்களுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் இணைத்து பல்வேறு விவரங்களை சேகரித்துள்ளது. இதன் காரணமாக நன்கொடையாளர்கள் எந்தவித தயக்கமும் இன்றி நன்கொடைகள் அளிக்கலாம் என்று காமன்வெல்த் இன்குளூசிவ் குரோத் சர்வீசஸ் நிறுவனத் தலைவர் மோகன் கவுல்கூறினார். இது நன்கொடையாளர்களுக்கு அவர்களின் நிதி சரியானவர்களின் கைகளில் சென்றடைகிறதா என்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வலையில் சிக்கிய கள்ளத்துப்பாக்கி

சிதம்பரம்,செப்.3- சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் மணிகண்டன் மற்றும் ராஜாராமன் ஆகியோர் மீன் பிடி வலையில் கள்ளத்துப்பாக்கி சிக்கியுள்ளது. அண்ணாமலை நகர் பகுதியில் சனிக்கிழமையன்று  கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி சாலையையொட்டி உள்ள  கான்சாகி வாய்க்காலில்  வலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது  4 அடி 20 சென்டிமீட்டர் நீளமுள்ள நாட்டு துப்பாக்கி ஒன்று  கிடைத்தது. இதனைக் கண்ட அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  துப்பாக்கியின் மொத்தம் நீளம் 140 சென்டிமீட்டர் என்றும்  இதன் எடை 3 கிலோ 155 கிராம் என்றும் இதனை யார் பயன்படுத்தி வந்தனர் என  காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கல்லால் தாக்கி முதியவர் கொலை

விழுப்புரம்,செப்.3- விழுப்புரம் அருகே வி.புதூர் கிராமத்தில் கல்லால் தாக்கி முதியவரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே வி,புதூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 70) முதியவர். இவர்  ஞாயிறன்று காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் பால்கறக்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (43) முதியவர் வரும் வழியில் வந்து அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். அந்த தகராறில் முதியவர் இந்திரஜித்தை மகேஸ்வரன் பலமாக தாக்கினார். இந்த தாக்குதலில் முதியவர் கீழே சாய்ந்தார். இதனையடுத்து மகேஸ்வரன் சாலையில் கிடந்த கல்லை எடுத்து முதியவர் தலையில் போட்டு கொலை செய்தார். தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

நிதி உதவி வழங்கும் திட்டம்:  ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை, செப். 3 - சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பிவ, மிபிவ, மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த ஆண், பெண் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு நவீன சலவையகம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க  அதற்கான நிதி தோராயமாக நிபந்தனைகளுடன் ஒரு குழுவிற்கு  ரூ. 3லட்சம் வழங்கப்படும். எனவே இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தகுதியான குழுக்களை அமைத்து அக்குழுவின் மூலம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார்.

தீட்சிதர்களிடமிருந்து சிதம்பரம் நடராஜர்  கோயிலை மீட்க பேரணி, பொதுக்கூட்டம்

சிதம்பரம், செப். 3- சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையதுறையின் கீழ் கொண்டு வருவது குறித்து சிதம்பரம் மக்கள்நலக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்திற்கு மக்கள் நலக்குழு வின் தலைவர் சந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் திராவிட கழக பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதனைதொடர்ந்து துரை.சந்திர சேகரன் மற்றும் சந்திரபாண்டியன் செய்தி யாளர்களிடம் பேசுகையில் சிதம்பரம் மக்கள் நலக்குழு சார்பில் நடராசர் கோவிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி சிதம்பரம் மேலவீதியில் உள்ள பெரியார் சிலையிலிருந்து உதவி ஆட்சியர் அலுவலகம் வரை அனைத்து கட்சியினர் பங்கேற்கும் பேரணி நடை பெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து சிதம்பரம் போல் நாராயணா தெருவில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன்.எம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சித்தார்த்தன், மக்கள் அதிகாரம் பொது செயலாளர் ராஜி, பாமக மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இந்தப் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்து பொதுமக்கள் சமூக ஆர்வ லர்கள் பெருந்திரளாக பங்கேற்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பன்றிக் காய்ச்சலுக்கு வியாபாரி பலி

சென்னை, செப். 3- பன்றி காய்ச்சலுக்கு மளிகைக் கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பகுதி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்தவர் ரவிக்குமார் (59). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சனை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று (செப். 3) உயிரி ழந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலை யில் அவருக்கு பன்றி காய்ச்சல் (எச்1 என்1ஸ்வைன் ப்ளூ) தாக்கியிருந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதன் காரணமாக மருத்துவர்கள் வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணி யாளர்கள் அவர் வசித்து வந்த வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர் நடத்தி வந்த கடையை ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மூட நகராட்சி ஆணையர் சதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.