districts

திறக்கப்படாத ரேசன் கடைகள்: பிப். 2 முற்றுகை போராட்டம்

புதுச்சேரி, ஜன. 24- புதுச்சேரியில் ரேசன் கடைகளை திறக்கக் கோரி பிப்ரவரி 2 அன்று குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக பெண்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. புதுச்சேரி அனைத்து பெண்கள் கூட்ட மைப்பின் நிர்வாகிகள் கூட்டம் முதலியார்பேட்டையில் செவ்வாயன்று (ஜன. 24) நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் டி.ஜி.முனி யம்மாள் தலைமை வகித்தார். மாதர் சங்க செயலாளர் ஏ.இளவரசி (மாதர் சங்கம்), மாரிமுத்து( சமம் சுயசார்பு பெண்கள் இயக்கம்), கே.சரளா(தலித் மக்கள் பாது காப்பு இயக்கம்),  வி.உமா(தீண்டாமை ஒழிப்பு முன்னணி) மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளவரசி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  ''அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் 2020-ல் பொது மக்கள் மத்தியில் கள ஆய்வு செய்து அரிசி தான் வேண்டும், பணம் வேண்டாம் என்று அப்போதைய ஆளுநர் கிரண்பேடி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். அதனடிப்படையில் மூன்று மாதம் அரிசி வழங்கப்பட்டது. படிப்படியாக குறைந்து புதுச்சேரி முழுவதும் ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து பலகட்ட போராட்டங்களை அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு நடத்தியது. இதையடுத்து கடந்த 2022 அக்டோபரில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் ரேசன் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். உடனடியாக அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் அமைச்சர் கூறியது வெறும் வாய் ஜாலம்போல் இல்லாமல், உடனே ரேசன் கடைகளை திறக்க வேண்டும் என்றோம். அதன் அடிப்படையில் தீபாவளி பஜார் அமைக்கப்பட்டது. அதன்பிறகு முதல்வர் ரங்கசாமியை பெண்கள் முற்றுகையிட்டு கேட்டபோது, ரேசன் கடைகளை திறந்து விடுவோம் என்று கூறினார். ஆனால் ரேசன் கடைகள் திறக்கப்படவில்லை. பொங்கலுக்கு வழங்க வேண்டிய பொங்கல் இலவசங்கள் ரேசனில் வழங்கப்படும் என்றனர். பின்னர் அங்கன்வாடி என்றனர். ஆனால் இறுதியாக இலவச பொருட்கள் போடும் முடிவு ரத்து செய்யப்பட்டது. மாறாக ரூ.500 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மதுபானக் கடைகளை திறப்பதற்கு ஆளுநரால் அனுமதி அளிக்க முடிகிறது. ஆனால் ரேசன் கடைகளை திறப்பதற்கு கை வலிக்கிறது. அவர்களின் இந்த கொள்கைப் போக்கை கண்டித்து பிப்ரவரி 2 அன்று அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் குடிமைப் பொருள் வழங்கல் துறை முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.