சென்னை,ஆக.4-
சென்னை மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்க ளுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 விழுக்காடு இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப் பிப்பவர்கள் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வாகனம் வாங்குவதற்கான விலைப்புள்ளி இணைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால், 1. பேஷ் இமாம், 2.அரபி ஆசிரியர்கள், 3. மோதினார், 4. முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் உலமாக்கள், சென்னை-1, ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில், 6வது தளத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.