கிருஷ்ணகிரி, ஜூலை 30-
தொழிலாளர் விரோத, மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை, சட்டங்களை கைவிட வலியுறுத்தி ஒன்றிய-மாநில தொழிற்சங்கங்கள் சார்பில் ஓசூரில் மாவட்ட சிறப்பு மாநாடு நடைபெற்றது.
தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மாதையன், டபிள்யூபிடியுசி தலைவர் காசிநாதன், தலைமை தாங்கினர்.
சங்கத் தலைவர்கள் வாசுதேவன் (சிஐடியு,) கிருஷ்ணமூர்த்தி (எல் பி எஃப்), செந்தில் (ஏஐடியுசி), அருளானந்தன் (டபிள்யூபிடியுசி), முன்னிலை வகித்தனர். தொமுச பேரவை அமைப்பு செயலாளர் தன சேகரன், மாநில பேரவை செயலாளர் கிருஷ்ணன், சக்திவேல் மணிகண்டன், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கம் (சிஐடியு ) மாநில துணை செயலாளர் கோவிந்தம்மாள் நன்றி கூறினார்.
பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்தி, விரிவுபடுத்த வேண்டும், பொது துறை, அரசு துறைகளை தணியாருக்கு விற்காதே, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும், உதய் திட்டத்தை, மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும், அரசு துறையில் ஒப்பந்த முறையை முற்றாக ஒழித்திட வேண்டும், உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 9 அன்று நடைபெறும் அனைத்து தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாட்டை விளக்கி அனைத்து தொழிற்சாலைகளிலும் கூட்டு பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.