சென்னை, ஜன. 13- சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரை கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்த மழைநீர் வடிகால் கால்வாய்களில் கொசுப் புழு நாசினி தெளிப்பதற்காக ஒரு கோட்டத்திற்கு ஒரு கைத்தெளிப்பான் வீதம் 200 கோட்டங்க ளிலும் மூலதன நிதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் 200 புதிய கைத்தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன. நீர்வழித்தடங்களில் கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள பெருநிறுவன சமுக பங்களிப்பு நிதியின் கீழ் தலா ரூ.13.5 லட்சம் என மொத்தம் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் 6 டிரோன் எந்திரங்களும் வழங்கப்பட்டன. மாநகராட்சி வளாகத்தில் நடை பெற்ற விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்கும், மக்காத குப்பைகளைப் பெறுவதற்கான புதிய குப்பைத் தொட்டிகள், பயன்பாட்டில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், குப்பைத் தொட்டிகளின் வடிவம் மற்றும் தாங்கும் திறன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட பச்சை மற்றும் நீல நிறத்திலான 20 ஆயிரம் புதிய குப்பைத் தொட்டிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு மண்டலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.