திருவண்ணாமலை,நவ.26- திருவண்ணாமலை தீப விழாவில் குற்றத்தடுப்பு, பாது காப்பு பணி, போக்குவரத்து சீரமைப்பு பணி ஆகியவற்றில் 14 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களை கண்காணிக்க 10 ட்ரோன் கேமராக்கள், திருட்டு, கொள்ளை குறித்து 10 இடங்களில் எல்இடி திரை மூலம் விழிப்புணர்வு காணொளி, காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய 35 ஆயிரம் விரிஸ்ட் பேண்ட்ஸ், தலைமையக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க 19 இடங்களில் 50 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தகவல் தொடர்பை மேம்படுத்த கூடுதலாக 4 செல்போன் கோபுரம், 50 இடங்களில் 4 அடி உயரம் கொண்ட உயர் மேடைகளும் அமைத்திருந்தனர்.