districts

img

பூட்டிக்கிடக்கும் ரத்த வங்கியை திறந்திடுக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூன் 16-

     பொன்னேரி அரசு மருத்துவமனையில் கடந்த 10 மாதங்களாக பூட்டி கிடக்கும் ரத்த வங்கியை திறந்து,  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

   பொன்னேரி அரசு பொது மருத்துவ மனைக்கு நாள் ஒன்றுக்கு 500 கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்ற னர். இங்கு அவசர விபத்து பிரிவு,  பிரசவம்,  சர்க்கரை நோய், மூச்சுத் திணறல், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்குள்ள உள்நோயாளிகளுக்கு தேவையான ரத்தம் வேண்டுமானாலும், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொடுக்க  வேண்டும். அங்கிருந்து ரத்தம் கொண்டு  வந்து  பொன்னேரி அரசு மருத்துவமனையில் இருக்கும் உள்நோயாளிக்கு  ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது.  

    இந்த நிலையில் ஒரு யூனிட் ரத்தம் கொடுக்க வேண்டும் என்றால் கூட 50 கி.மீ  அப்பால் உள்ள திருவள்ளூர் அரசு மருத்து வமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொன்னேரி அரசு மருத்துவ மனையிலேயே  ரத்த வங்கி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இதனை தொடர்ந்து சுகாதார துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் விளைவாக ரத்த வங்கி வருவ தற்கு அரசு நிதி ஒதுக்கியது. ரத்த வங்கிக்கு  தேவையான கருவிகளும் மருத்து வமனைக்கு வந்து 10 மாதங்களுக்கு மேல்  ஆகிறது. ரூ25 லட்சம் மதிப்புள்ள ரத்த  வங்கி கட்டிடம், ரூ50 லட்சம் மதிப்புள்ள  ரத்த வங்கிக்கு  கருவிகள் பொருத்தப்பட்டது.  ஆனால் இவையாவும் பயன்பாட்டிற்கே கொண்டுவராமல் பழுதடைந்து கிடக்கிறது.

    மக்கள் உயிர் காக்கும் ரத்த வங்கியை சுகாதார துறையும்,  பொன்னேரி அரசு மருத்து வமனை நிர்வாகம் உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் பொன்னேரி பகுதி செயலாளர் கே.ஜெகன் வியாழனன்று (ஜூன்15)  பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி அசோகனிடம்  மனு அளித்துள்ளனர்.

   இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.மதன், பகுதி தலைவர் எம்.தினேஷ், துணைச் செயலாளர் கே.நாக ராஜ், பகுதி குழு உறுப்பினர் எஸ்.புருஷோத் தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.