districts

img

சவாலில் வென்ற மாணவி இருக்கையில் அமரவைத்த ஆசிரியை!

விழுப்புரம், அக்.28- முதல் மதிப்பெண் பெற்ற 12ஆம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியரின் செயல் அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ளது அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி.  இங்கு 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சசிகலா. இவர் பள்ளியில் காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு பள்ளியில் நடந்த இறைவணக்கத்தின்போது, காலாண்டு தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சிறந்த முதல் மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு பரிசு ஒன்று காத்திருக்கிறது என அறிவித்தார். தேர்வில் 600க்கு 581 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக வந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த மாணவி எஸ்.லோகிதாவை பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் இணைந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து அவருக்கு கிரீடம் சூட்டி அழகு பார்த்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட மாணவி லோகிதா ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கண்காணித்தார். தொடர்ந்து, பள்ளியில் உள்ள சத்துணவு மையத்துக்கு சென்று மாணவிகளுக்கு வழங்க இருந்த மதிய உணவை சாப்பிட்டு பார்த்தார்.  இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா கூறுகையில், “மாணவிகள் கல்வியுடன், தனித்திறன்களையும், தலைமைப் பண்பையும் வளர்த்துக் கொள்வது அவசியம் என்பதற்காகவே இந்த பரிசு. இதேபோன்று அடுத்த வாரத்தில், காலாண்டு தேர்வில் 10ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கும் பரிசு காத்திருக்கிறது” என்றார்.