திருப்பத்தூர், நவ. 5- பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் நுரை ததும்பி துர்நாற்றம் வீசுகிறது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதி களில் சனிக்கிழமையன்று மாலை முதல் இரவு வரை பெய்த கனமழை யால் மாராபட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அருகாமையில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலை கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில் திறந்து விடுவதாக கூறப்படுகிறது.இதனால் ஆற்று நீர் முழுவதும் நுரை ததும்பி பாலாற்றில் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து ஏற்கெனவே பலமுறை புகார் அளித்தும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த மாதம் இதே போல் ஆற்று நீரில் நுரை ததும்பி சென்ற போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றில் கழிவு நீரை திறந்து விடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் தற்போது மீண்டும் அதேபோல் ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி கழிவு நீரை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.