districts

img

மாற்றுத்திறனாளி சிறுவன் வீட்டில் முதல்வர் நலம் விசாரிப்பு!

திருவண்ணாமலை,ஜூலை 8- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தின் இல்லத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பயனாளிக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி நலம் விசாரித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- தமிழக முதல்வர் வெள்ளியன்று (ஜூலை 8) திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சிவானந்தம் (14) என்ற மாற்றுத்திறனாளியின் இல்லத்திற்கு சென்று, அவருக்கு அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு மறுவாழ்வு பெற்ற விவரங்களை கேட்டறிந்து, அப்பயனாளிக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி, நலம் விசாரித்தார்.

சிவானந்தத்தின் தந்தை ஏழுமலை ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவரது தாயார் தமிழரசி விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு சிவானந்தம் உட்பட ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இப்பயனாளியின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அண்மையில் மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக ரூ.25,000, கறவை மாடு வாங்குவதற்காக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மூலம் இல்லம் தோறும் மேற்கொண்ட கள ஆய்வின் போது, ஒன்றரை வயதில் சிவானந்தத்திற்கு மூளைமுடக்குவாதம் மற்றும் அறிவுசார் குறைபாடு கண்டறியப்பட்டு, தொடர்ந்து இயன்முறை பயிற்சி மற்றும் ஆரம்பகல்வி வழங்கப்பட்டது. இப்பயனாளிக்கு ரூ.9,000 மதிப்புள்ள தசைப்பயிற்சி உபகரணங்கள் மற்றும் ரூ.4,000 மதிப்புள்ள சிறப்புக்கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் வாயிலாக இல்லத்திற்கே சென்று தசைப்பயிற்சி மற்றும் சிறப்புக்கல்வி வழங்கப்பட்டு, தற்போது இப்பயனாளிக்கு 10-ஆம் வகுப்புக்கான கல்விப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் இப்பயனாளிக்கு மாதம்தோறும் பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.1500 கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு, தற்போது ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக உதவியாளருக்கான உதவித்தொகையும் ரூ.1000 இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. இத்துடன் ரூ.15000 மதிப்புள்ள மூளை முடக்குவாத சிறப்பு சக்கரநாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் எ.வ. வேலு, செஞ்சி கே.எஸ். மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.