districts

img

கோழிக்கறி விலை கடும் உயர்வு

சென்னை,ஜூன் 12-

     சென்னையில் கோழிக்கறி விலை சமீப காலமாக கடுமையாக உயர்ந்து வருகிறது.

     சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கோடை வெயில் காரணமாக கறிக்கோழி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் சென்னைக்கு கறிக்கோழிகள் குறைவாக கொண்டு வரப்படுகின்றன. மேலும் தற்போது மீன்பிடி தடை காலமும் அமலில் உள்ளதால் மீன் வரத்து குறைந்து காணப்படுகிறது. சிறிய வகை மீன்கள் கிலோ ரூ.350-க்கு விற்கப்படுகிறது. மீன்தட்டுப்பாடு நிலவும் நிலையில் ஆட்டுக்கறி ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது. எனவே மீன் மற்றும் ஆட்டுக்கறி வாங்க பொதுமக்கள் தயங்குகிறார்கள். இதனால் கடந்த 2 மாதங்களாக அசைவ பிரியர்களின் கவனம் கோழிக்கறி பக்கம் திரும்பியுள்ளது. இதனால் சென்னையில் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கோழிக்கறி மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கிலோ ரூ.220 -க்கும், மே மாதம் கிலோ ரூ.240-க்கும் விற்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் கோழிக்கறி விலை ரூ.260 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் ஞாயிறன்று ரூ.300 ஆக அதிகரித்தது.